55வது ஆண்டாக வெள்ளியங்கிரி யாத்திரை ஊர் கூடி வழியனுப்பி உற்சாகம்!
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி உற்சாகத்துடன் வழியனுப்பி வைத்தனர்.
பல்லடத்தை அடுத்த, பருவாய் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளியங்கிரி ஆண்டவர் பாதயாத்திரை காவடிக் குழுவினர், ஆண்டுதோறும் வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நேற்று, 55வது ஆண்டாக பாதயாத்திரை புறப்பட்டனர். இது குறித்து குருசாமி சுப்பிரமணியம் கூறியதாவது : கடந்த, 1971ம் ஆண்டு முதல் வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். ஒவ்வொரு ஆண்டும், பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நடப்பு ஆண்டு, 150க்கும் மேற்பட்டவர்கள் பாதயாத்திரையில் பங்கேற்கின்றனர். காவடி எடுத்தபடி, வெள்ளிங்கிரி மலைக்குச் சென்று தரிசனம் செய்து திரும்பும் வழியில் பேரூர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வோம். யாத்திரை முடிந்து, யுகாதி பண்டிகை அன்று கிராமத்துக்கு திரும்புவோம். வெள்ளிங்கிரி மலையில் இருந்து எடுத்து புறப்பட்ட தீர்த்தத்தில், பருவாய் மாரியம்மன் க்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபடுவோம். ஆண்டுதோறும் தவறாமல் இதை கடைப்பிடித்து வருகிறோம் என்றார். முன்னதாக, மாரியம்மன் கோவிலுக்கு முன்பு காவடி ஆட்டம் நடந்தது. தொடர்ந்து, ஊர் பொதுமக்கள், பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இணைந்து விநாயகர் மற்றும் மாரியம்மனை வழிபட்டனர். இதனையடுத்து, பக்தர்கள் பாதயாத்திரை புறப்பட, குடும்பத்தினர், ஊர் பொதுமக்கள் இணைந்து அவர்களை வழியனுப்பி வைத்தனர்.