உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை வனப்பகுதியில் வீரராசேந்திரன் கல்வெட்டு; ஆய்வில் கண்டுபிடிப்பு

உடுமலை வனப்பகுதியில் வீரராசேந்திரன் கல்வெட்டு; ஆய்வில் கண்டுபிடிப்பு

உடுமலை: உடுமலை அருகேயுள்ள கல்லாபுரத்தில், வீரராசேந்திரன் காலத்திய கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. உடுமலை, கல்லாபுரம் கோபாலபுரம் அருகேயுள்ள வனப்பகுதியில், கி.பி., 12ம் நூற்றாண்டைச்சேர்ந்த, கொங்கு நாட்டை ஆட்சி செய்த வீரராசேந்திரன் காலத்தை சேர்ந்த கல்வெட்டு ஒன்றை, உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் ஆவணப்படுத்தியுள்ளனர்.


அக்கல்வெட்டில், ‘‘ஸ்வஸ்ஸ்ரீ வீரராசேந்திர தெவற்கு யாண்டு மங்கலத்து மலையாட்டி சாத்தன் ஆப’’ என எழுதப்பட்டுள்ளது. இதன் முழுமையான கல்வெட்டு கிடைக்கவில்லை. இது குறித்து, மத்திய தொல்லியல் துறை (ஓய்வு) தொல்லியல் ஆய்வாளர் மூர்த்தீஸ்வரி கூறியதாவது: தற்போது கிடைத்துள்ள கல்வெட்டில், வீரராசேந்திரன் என்றும், தேவற்கு என்றும் மங்கலத்து மலையாட்டி என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இதிலிருந்து, தென்கொங்கு நாட்டுப்பகுதியை சேர, சோழ, பாண்டியர் ஆட்சி செய்தமைக்கான பல்வேறு கல்வெட்டுகள் ஆங்காங்கே கிடைத்துள்ளதும், தற்போது கிடைத்துள்ள கல்வெட்டு, அதனை உறுதி செய்யும் வகையிலும் உள்ளது. ஏற்கனவே, உடுக்கம்பாளையத்தில் பாண்டியர் பெயர் பொறித்த கல்வெட்டும், கண்ணாடிப்புத்துாரின், பழைய பெயர் வீரபாண்டி சதுர்வேதி மங்கலம் என்ற பழங்காலப் பெயரும், இப்பகுதியை பாண்டியர்கள் ஆட்சி செய்ததற்கான சான்றுகளாக உள்ளன.


அதே போல், பதிற்றுப்பத்தில், சேரன் செங்குட்டுவனின் கொடி வழி உறவுகள் இங்கு வந்து அயிரை மலையில் வழிபட்டமைக்கான இலக்கியச்சான்றுகளும் உள்ளன. மேலும், விக்கிரமசோழன் ஆட்சி செய்தமைக்கான சான்றாக கல்லாபுரம் உள்ளதும், அதன் பண்டைய கால பெயர் விக்கிரம சோழ நல்லுார் என்பதாகும். கி.பி., 1,206 முதல் 1,250 வரைக்கும் வீரராசேந்திரன் ஆட்சி செய்தமைக்கான சான்றுகள், கடத்துார் மருதீசர் கோவில் கல்வெட்டில் உள்ளன. அதனை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது வீரராசேந்திரன் காலத்திய கல்வெட்டு கிடைத்துள்ளது. இவ்வாறு, தெரிவித்தார். இந்த ஆய்வில், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தைச்சேர்ந்த, அருள் செல்வன், சிவக்குமார், வீரய்யன், பல்லடம் அரசு கல்லுாரி, தமிழ்த்துறைப் பேராசிரியர் ஜெய்சிங் ஆகியோரும் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !