பழங்குடியின கிராமத்தில் களை கட்டிய திருவிழா; குலதெய்வத்திற்கு சிறப்பு பூஜை
பந்தலூர்; பந்தலூர் அருகே பாலாப்பள்ளி காட்டு நாயக்கர் பழங்குடியின, கிராமத்தில் கோவில் திருவிழா கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. முதல் நாள் நிகழ்வில் குலதெய்வத்திற்கு இரவு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பாரம்பரிய நடனமாடி, கோவிலுக்கு தேவையான பூஜை பொருட்களை எடுத்து வந்தனர். தொடர்ந்து கிராம தலைவர் மாறன் தலைமையில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதுடன், அம்மன் மற்றும் குளியமுத்தப்பன் ஆகியோருக்கு அலங்காரம் செய்யப்பட்டு, அம்மனுக்கு அவல், பழத்துடன் பூஜை செய்யப்பட்டது. குளியமுத்தப்பனுக்கு பக்தர்கள் கோழி வெட்டி தங்கள் வேண்டுதலை நிறைவு செய்தனர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு, அம்மனுக்கு தேங்காய் உடைத்து வேண்டுதல் நிறைவேற்றினார்கள். பின்னர் அம்மன் மற்றும் குளியமுத்தப்பன் வேடமணிந்த சாமியாடிகள், அரிசி பிரசாதமாக வழங்கி அருள்வாக்கு கூறினார்கள். பெண்கள் பங்கேற்ற கும்மியாட்டம், ஆண்கள் பங்கேற்ற பாரம்பரிய இசையுடன் நடனம் அனைவரையும் கவர்ந்தது. சீரான மழை பொழிந்து, விவசாயம் மேம்படவும், வனம் பாதுகாக்கவும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோபி, மாதவன், பிந்து தலைமையிலான ஊர்மக்கள் மற்றும் வயநாடன் செட்டி சமுதாய மக்கள் இணைந்து செய்திருந்தனர்.