அவிநாசி சித்திரை தேர்த்திருவிழா; தேர் அலங்கார ஆயக்கால் முகூர்த்த பூஜை
அவிநாசி: கொங்கேழு சிவ ஸ்தலங்களில் முதன்மையானதும், தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேர் கொண்டதுமான, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், வரும், 21ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரைத் தேர்த்திருவிழா துவங்குகிறது. இன்று தேர் அலங்காரப் பணிக்காக ஆயக்கால் முகூர்த்த பூஜை பெரிய தேர் மற்றும் அம்மன் தேர்களுக்கு நடந்தது.
கோவில் செயல் அலுவலர் சபரீஷ்குமார் கூறியதாவது: 21ம் தேதி இரவு திருமுருகநாதர் வருகை நிகழ்ச்சியும், 22ம் தேதி மாலை சூரிய, சந்திர மண்டல காட்சி, 23ம் தேதி அதிகார நந்தி, கிளி, பூதம், அன்னபக்ஷி வாகன காட்சிகள், 24ம் தேதி கைலாச வாகனம், புஷ்ப பல்லாக்கு ஆகியவை நடைபெறுகிறது. விழாவில், 25ம் தேதி இரவு முக்கிய நிகழ்ச்சியான பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு, நாயன்மார்களுக்கு காட்சியளித்தல், 26ம் தேதி கற்பக விருட்சம், யானை வாகனம், சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. ஏப். 27ம் தேதி பஞ்சமூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி, 28ம் தேதி காலை பெரிய தேர் வடம் பிடித்து இழுத்து வடக்கு ரத வீதியில் நிறுத்துதல், 29ம் தேதி மீண்டும் வடம் பிடித்து நிலை சேர்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும், 30ம் தேதி காலை கருணாம்பிகை அம்மன், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், கரிவரதராஜ பெருமாள் ஆகிய திருத்தேர்கள் வடம் பிடித்து இழுத்தல், தொடர்ந்து வண்டித் தாரையும் நடக்கிறது. மே 1ம் தேதி பரிவேட்டை, 2ம் தேதி இரவு தெப்பத்தேர், 3ம் தேதி நடராஜப் பெருமான் தரிசனம், கொடியிறக்கம், 4ம் தேதி மஞ்சள் நீர், மயில்வாகன காட்சியுடன் தேர்த்திருவிழா நிறைவுபெறுகிறது. தேர்களை அலங்கரிக்கும் வகையில், ஏர் கம்ப்ரசர் கொண்டு சுத்தம் செய்யப்படும். ஓரிரு நாட்களில் தேரை அலங்கரிக்கும் பணிகள் தொடங்கும். பக்தர்களுக்கான அனைத்து வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும்.