இன்று தேய்பிறை பஞ்சமி, வராக ஜெயந்தி: வராகர், வராகியை வழிபட வாழ்வு வளம் பெறும்!
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து உலகங்களுக்கும் செல்லும் சக்தி படைத்தவன். அவன் ஒரு சமயம் மகாவிஷ்ணுவுக்கு எவ்வளவு வலிமை உள்ளதென்று அறிய வைகுண்டம் சென்றான். அங்கே அவன் கண்களுக்கு பகவான் தென்படவில்லை. பல இடங்களிலும் தேடிப்பார்த்தான். அப்போது ஓரிடத்தில் பூமாதேவி தியானத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டான். அவன் கண்களுக்கு உருண்டை வடிவத்தில் ஒரு பெண் அமர்ந்திருப்பதுபோல் தெரிந்தது. உற்றுப் பார்த்தான். அவள் அழகாக இருப்பதைக் கண்டான். கண்ணிமைக்கும் நேரத்தில் அவளைத் தூக்கிக் கொண்டு பாதாள உலகம் விரைந்தான்.
“பகவானே, என்னைக் காப்பாற்றுங்கள்” என்று பூமாதேவி அபயக்குரல் கொடுத்தாள். அந்தக் குரல் மகாவிஷ்ணுவின் காதில் விழுந்தது. பூமாதேவி எங்கே மறைத்து வைக்கப்பட்டிருக்கிறாள் என்பதை அறிந்த மகாவிஷ்ணு வராக (பன்றி) அவதாரமெடுத்து பாதாள லோகம் சென்று இரண்யாட்சனை வதம்செய்து, பூமியைத் தன் கோரைப் பற்களால் தூக்கிக்கொண்டு வெளியே வந்தார். வராகராய்க் காட்சிதந்த மகாவிஷ்ணுவை பூமாதேவி அன்புடன் பார்த்து ஆரத்தழுவினார். அதனால் மகிழ்ந்த வராகர் அவளைத் தானும் தழுவினார். இவ்வாறு அவர்கள் ஆலிங்கனம் செய்துகொண்ட காலம் ‘தேவவருஷம்’ என்கிறது புராணம். இருந்தாலும் அது அந்தி நேரம். அதன் விøளாக ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் பவுமன். இவனே பிற்காலத்தில் நரகாசுரன் ஆனான் என்கிறது புராணம். பொதுவாக, வராக மூர்த்தியை வைணவத் திருக்கோயில்களில் தனிச்சன்னிதியிலோ, சித்திர வடிவிலோ தரிசிக்கலாம். அந்த வகையில் நூற்றெட்டு வைணவத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் கோயிலில், தசாவதாரச் சன்னிதியில் தனித்து நிற்கும் வராகரை தரிசிக்கலாம். இதேபோல் ஸ்ரீரங்கம் கோயிலின் வடக்குப்புறம் ஓடும் கொள்ளிடக்கரைக்கு அருகில் அமைந்துள்ள தசாவதாரக் கோயிலில் வராகர் சுமார் ஆறடி உயரத்தில் காட்சி தருவதை தரிசிக்கலாம்.
வராகமூர்த்தியை வழிபட்டால் பூமி சம்பந்தமான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் நல்ல பலன்களை அடைவர். மேலும், சனிதசை, சனி தோஷ சங்கடங்களிலிருந்து விடுபட்டு சுகம் காணலாம். திருமணத்தடைகளை நீக்கும் வல்லமைப் படைத்தவர் வராகர். இவரை தம்பதி சமேதராக வழிபட வாழ்வில் என்றும் சுகம் காணலாம் என்பது நம்பிக்கை.
லட்சுமி வராஹர் காயத்திரி மந்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸந்தாநபுத்ராய தீமஹி
தன்னோ விஷ்ணுஹ் ப்ரசோதயாத்
அமாவாசை, பௌர்ணமியை அடுத்து வரும் ஐந்தாம் திதி பஞ்சமி ஆகும். இது வாராகி அம்மனை வழிபட மிகவும் உகந்த நாள். தேய்பிறை பஞ்சமி திதியில் தான் வாராஹி அம்மன் அவதரித்தார். வீட்டில் விளக்கேற்றி வாராகிக்கு செம்பருத்தி சாற்றி வழிபட வேண்டும்.. சப்த மாதர்களில் அதீத வீரியமும் தீய சக்திகளை அழிப்பதில் வேகமும் துடிப்பும் கொண்டு ஓடோடி வருபவள் வாராஹி தேவி. சப்தமாதர்களில் வாராஹியின் 12 திருநாமங்கள் மிகவும் சக்திவாய்ந்தவை என்றும், இந்தத் திருநாமங்களை செவ்வாய், வெள்ளி மற்றும் பஞ்சமி காலங்களில், உச்சாடனம் செய்யச் செய்ய... சொல்லச் சொல்ல நம்மை அரண் போல் வந்து காத்தருள்வாள் வாராஹி தேவி என்கிறார்கள் பக்தர்கள். வாராஹி - மனச் சஞ்சலங்கள், வீண் கலக்கம், சத்ரு பயம் ஆகியவற்றை விலக்கி, சந்தோஷ வாழ்வளிப்பாள். இன்று வராகி, வராகரை தம்பதி சமேதராக வழிபட வேண்டியது யாவும் கிடைக்கும்!