குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் பக்தர்களின் தாகம் தீர்க்க மோர் விநியோகம்
பாலக்காடு: கடும் கோடை வெப்பத்தால் அவதிப்படும் பக்தர்களுக்குக் குளிர்ச்சியூட்டும் விதமாக, குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், நிர்வாகத்தின் சார்பில் மோர் (சம்பாரம்) விநியோகிக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக இந்த ஆண்டு சற்று தாமதமானாலும், பக்தர்களின் நலன் கருதி இந்த சேவை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கோவிலின் கிழக்கு நடை மற்றும் தெற்கு நடை ஆகிய பகுதிகளில் இதற்கென பிரத்யேக தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் 14 கேன் தயிர் கொண்டு தயாரிக்கப்படும் மோர், வரிசையில் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. வழக்கமாக கோடை காலத்தின் தொடக்கத்திலேயே இப்பணி தொடங்குவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், நிர்வாக ரீதியான அனுமதிகளைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். தாமதமானாலும், கடும் வெயிலில் தவித்த தங்களுக்கு இது பெரும் ஆறுதலாக இருப்பதாக பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் காலங்களிலும், வானிலை கடுமையாக இருக்கும்போதும் இதுபோன்ற அத்தியாவசிய வசதிகளை எவ்விதத் தடையுமின்றி முன்கூட்டியே செய்ய வேண்டும் என தேவஸ்வம் வாரியத்திற்குப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய தண்ணீர் பந்தல்களை கோவில் நிர்வாகம் தலைவர் கோபிநாத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் தேவஸ்வம் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மனோஜ், ஷினிஜா, சுகாதார மேற்பார்வையாளர் டாக்டர் ராஜீவ், கலாநிலையம் கண்காணிப்பாளர் முரளி புறநாட்டுகரா ஆகியோர் கலந்துகொண்டனர்.