உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா துவங்கியது

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா துவங்கியது

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா 7 கிராம மக்கள் சாகை வார்த்தலுடன் துவங்கியது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா துவங்கியது. சித்திரை திருவிழாவையொட்டி இன்று மாலை 4 மணியளவில் சாகை வார்த்தலுடன் விழா துவங்கியது.

இவ்விழாவையொட்டி கூவாகம், கூவாகம் காலனி, தொட்டி, நத்தம், அண்ணா நகர், செவிலியங்குளம், பாரதிநகர் உள்ளிட்ட 7 கிராமங்களில் இருந்து பெண்கள் கஞ்சி கலயங்களை எடுத்து வந்து கோவிலில் வைத்து ஸ்ரீ மாரியம்மனுக்கு படையலிட்டனர். அப்போது சுவாமிக்கு தீபாராதனை வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். நாளை ( 15ம் தேதி) மாலை 4 மணியளவில் பந்தலடி தெய்வநாயகம் தோப்பில் ஊர் பிரமுகர்களுக்கு தாலிகட்டுதல்( பாரதம் ஆரம்பம்) நிகழ்ச்சி நடக்கிறது.

16ம் தேதி சந்தனு சரிதம், இரவு 10 மணியளவில் சுவாமி வீதியுலா புறப்பாடு நடக்கிறது.

17ம் தேதி பீஷ்மர் பிறப்பு, இரவு 10 மணியளவில் சுவாமி வீதியுலா புறப்பாடும் நடக்கிறது.

18ம் தேதி தர்மர் பிறப்பும், இரவு 10 மணியளவில் சுவாமி வீதியுலா புறப்பாடும் நடக்கிறது.

19ம் தேதி பாஞ்சாலி பிறப்பும், இரவு 10 மணியளவில் வீதியுலா புறப்பாடும் நடக்கிறது.

20ம் தேதி பகாசூரன் வதம் செய்தலும், இரவு 10 மணியளவில் சுவாமி வீதியுலா புறப்பாடும் நடக்கிறது.

21ம் தேதி பாஞ்சாலி திருமணமும், இரவு 10 மணியளவில் சுவாமி வீதியுலா புறப்பாடும் நடக்கிறது.

22ம் தேதி கூத்தாண்டவர் பிறப்பும் இரவு 10 மணியளவில் சுவாமி வீதியுலா புறப்பாடும் நடக்கிறது.

23ம் தேதி ராஜசூய யாகம், இரவு 10 மணியளவில் சுவாமி வீதியுலா புறப்பாடும் நடக்கிறது.‌

24ம் தேதி விராடபர்வம் தெய்வநாயகம் தோப்பில் வெள்ளி கால் நடுதலும்,

25ம் தேதி கிருஷ்ணன் தூது, இரவு 10 மணியளவில் சுவாமி வீதியுலா புறப்பாடும் நடக்கிறது.

26ம் தேதி காலை அரவான் பலி, கூத்தாண்டவர் சுவாமிக்கு பாலாலயம் நடக்கிறது.

27ம் தேதி மாலை கம்பம் நிறுத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது.

28ம் தேதி இரவு சுவாமி திருக்கண் திறப்பு நிகழ்ச்சியும், திருநங்கைகள் (அரவாணிகள்) பக்தர்கள் பூசாரிகளின் கையால் தாலி கட்டி கொண்டு இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்வர்.

29ம் தேதி காலை 6.30 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது.

மாலை பந்தலடி தெய்வநாயகம் தோப்பில் பாரதம் படைத்தல், இரவு காளி கோவிலில் உயிர் பெறுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

30ம் தேதி விடையாத்தி நிகழ்ச்சியும்,

1ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

இத்திருவிழாவில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபடுவர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் ஆய்வாளர் புகழேந்தி மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !