பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை கொடியேற்றம்
பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கோயிலில் நேற்று முன்தினம் இரவு காப்பு கட்டப்பட்டு, நேற்று காலை 10:30 மணிக்கு தங்க கொடி மரத்தில் நந்தி கொடி ஏற்றப்பட்டது. பின்னர் அபிஷேகம் நடந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் தேரில் வலம் வந்தனர். தினமும் காலை மாலை பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவர். ஏப்., 26 மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் நடக்கிறது.
ஏப்., 27 மீனாட்சி திக் விஜயம், இரவு திருக்கல்யாண மண்டபத்தில் சீர்வரிசை வைபவம் நடக்கிறது. ஏப்., 28 மாலை 6:00 மணிக்கு சுந்தரேஸ்வரர் மாப்பிள்ளை திருக்கோலத்தில் புறப்பாடாகி, 6:30 மணிக்கு மேல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு திருக்கல்யாண கோலத்தில் பூ பல்லக்கில் பட்டனப்பிரவேசம் வர உள்ளனர். ஏப்., 29 காலை சித்திரை தேரோட்டத்தில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க உள்ளனர். தினம்தோறும் கோயிலில் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை மீனாட்சி சுந்தரேஸ்வரர், முத்தாலம்மன் கோயில் தேவஸ்தான டிரஸ்டிகள், ஆயிரவைசிய சபையினர் செய்துள்ளனர்.