அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றம்
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதும், சுந்தரமூர்த்தி நாயனாரால் தேவாரம் பாடல் பெற்ற சிறப்பு பெற்றதும், தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேர் என்றதுமான பெருங்கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர் திருவிழா விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு தேர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக விநாயகப் பெருமான், ஸ்ரீ சோமாஸ்கந்தர், ஸ்ரீ கருணாம்பிகை அம்மன், ஸ்ரீ சுப்பிரமணியர்,ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் கொடி மண்டபம் முன் எழுந்தருளினர். அதனைத் தொடர்ந்து கொடிக்கம்பத்திற்கு சிறப்பு பூஜைகளுடன் தீபாராதனை கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்ற விழா பூஜைகளை பெங்களூரு வேதஆகம மகா பாட சாலை முதல்வர் சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் பாடசாலை மாணவர்கள் மற்றும் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்கள் ஆகியோர் 4 வேதங்கள்,வேதப் பாராயணம், அவிநாசி தேவாரபாராயணம் செய்தனர். தேர் விழாவில் நாளை இரவு சூரிய சந்திர மண்டல காட்சி, நாளை அதிகார நந்தி கிளி பூதம், அன்னபட்சி வாகனம் மற்றும் புருஷாமிருக வாகன காட்சிகள், 24ம் தேதி கைலாச வாகனம்,புஷ்ப பல்லாக்கு ஆகியவை நடைபெறுகிறது. ஏப் 25ம் தேதி இரவு முக்கிய நிகழ்ச்சியான பஞ்சமூர்த்திகள் புறப்பாடு 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல், 26ம் தேதி கற்பக விருட்சம், வெள்ளை யானை வாகனம், சுவாமி திருக்கல்யாணம் ஆகியவை நடைபெறுகிறது. வரும் 27ம் தேதி பஞ்ச மூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி, 28ம் தேதி காலை பெரிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வடக்கு ரத வீதியில் நிறுத்துதல், 29ம் தேதி திருத்தேர் வடம் பிடித்து நிலை சேர்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும் 30ம் தேதி காலை கருணாம்பிகை அம்மன், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், கரி வரதராஜ பெருமாள் ஆகிய திருத்தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மே 1ம் தேதி பரிவேட்டை, மே 2ம் தேதி மாலை தெப்பத்தேர் உற்சவ நிகழ்ச்சி, 3ம் தேதி நடராஜப் பெருமான் தரிசனம்,4ம் தேதி மஞ்சள் நீர்,மயில் வாகன கட்சியுடன் தேர் திருவிழா நிறைவு பெறுகிறது. சித்திரை தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சபரீஷ் குமார் முன்னாள் அறங்காவலர் குழுவினர் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.