உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 1000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு

1000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே மேலத்துாவலில் 1000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.


மேலத்துாவலில் பழமையான சமணத் தீர்த்தங்கரர் சிற்பம் உள்ளதாக அப்பகுதி வேல்முருகன் சமீபத்தில் போலீசில் தெரிவித்தார். அந்த தகவலை அறிந்த சென்னை அகிம்சை நடைக்குழுவைச் சேர்ந்த தமிழ்ச் சமணர்கள் உள்ளூர் மக்கள் உதவியுடன் எளிமையாக ஒரு பள்ளி கட்டி பாதுகாக்க ஏற்பாடு செய்தனர்.தற்போது அவ்வூரில் நடந்த கும்பாபிஷேகத்தின் போது மண்ணில் பாதி புதைந்த நிலையில் இருந்த மகாவீரர் சிற்பத்துக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர்.


தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் ராஜகுரு கூறியதாவது: வணிக பாதைகளில் அதிகளவில் சமணப்பள்ளிகளை காணலாம். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிழக்கு கடற்கரைப் பெருவழி, ராமநாதபுரம் –மதுரை பெருவழி, தொண்டியிலிருந்து ஆனந்துார் வழியாக மதுரை செல்லும் பெருவழியில் சமண மதம் பரவியிருந்தற்கான தடயங்களும், தீர்த்தங்கரர் சிற்பங்களும் கிடைத்துள்ளன. தற்போது மேலத்துாவலில் 3 அடி உயரம், 2 அடி அகலம் உள்ள கருங்கல் சிற்பத்தில் தாமரைப்பீடத்தின் மேல் மகரத் தண்டுள்ள சிம்மாசனத்தில் அர்த்தபரியங்க ஆசனத்தில் அசோக மரத்தின் கீழ் அமர்ந்த நிலையில் மகாவீரர் காட்சியளிக்கிறார். அவர் தலையின் மீது முக்குடை அமைப்பும், பின்புறம் பிரபாவளி எனும் ஒளிவட்டமும் உள்ளன. இரு சாமரதாரிகள் அவரின் இருபுறமும் உள்ளனர். அதில் உள்ள முக்குடை சமண சமயச் சின்னம் ஆகும். இந்த சிற்பம் 11-ம் நுாற்றாண்டை சேர்ந்தது.


பெரும்பாலான வணிக வழித்தடங்களில் தீர்த்தங்கரர் சிற்பத்தை மட்டும் வைத்து வழிபட்டனர். அத்தகைய ஒரு சமணப்பள்ளி மேலத்துாவலில் உள்ளது. அப்பகுதியை சுற்றியுள்ள 20 ஏக்கரில் இரும்புக் காலத்தைச் சேர்ந்த வழுவழுப்பான கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. இதன் மூலம் 2000 ஆண்டுகள் பழமையான இரும்புக் காலத்தில் மக்கள் குடியிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !