தீர்த்தாண்டதானம் கடலில் பக்தர்கள் புனித நீராடல்
ADDED :1 days ago
திருவாடானை: வைகாசி அமாவாசையை முன்னிட்டு, தொண்டி அருகே உள்ள தீர்த்தாண்டதானம் கடலில் பக்தர்கள் புனித நீராடினர். ராமபிரான் ராவணனை வதம் செய்ய இலங்கை செல்லும் வழியில் வழிபட்ட தலங்களில் ஒன்றாகக் தீர்த்தாண்டதானம் கருதப்படுகிறது. ராமபிரான் தன் தந்தை தசரதருக்குத் திதி கொடுக்க நினைத்தபோது, அனைத்துப் புண்ணிய நதிகளும் இங்கே தீர்த்தமாக உருவெடுத்ததாக ஐதீகம். இதனாலேயே இந்த ஊர் தீர்த்தாண்டதானம் (தீர்த்தங்கள் ஆடிய தானம்) என அழைக்கப்படுகிறது. நேற்று வைகாசி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடிவிட்டு கடற்கரையில் அமைந்துள்ள சர்வ தீர்த்தேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி ஊர்வலம், அன்னதானம் நடந்தது.