பரஞ்ஜோதி மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை: மனமுருக வழிபட்ட பக்தர்கள்
ADDED :5 days ago
கோவை; கோவை ரத்தினபுரி கருணாநிதி நகரில் உள்ள அம்பிகை ஸ்ரீ பரஞ்ஜோதி மாரியம்மன் கோவில் 41ம் ஆண்டு உற்சவ திருவிழாவில் நடந்த திருவிளக்கு வழிபாட்டில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். காப்பு கட்டுதலுடன் துவங்கிய விழாவில் சீர்வரிசைகளுடன் அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி மற்றும் மேளதாளம் முழங்க அம்பிகை ஸ்ரீ பரஞ்ஜோதி மாரியம்மனுக்கு திருக்கல்யாணம் மற்றும் அன்னதானம் நடந்தது. பின் சக்தி ஊர்வலம் அழைத்தலுடன் பூவோடு பால்குடம், முளைப்பாரி எடுத்து பக்தர்கள் கோயில் வீதியில் ஊர்வலம் சென்றனர். இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை செய்யப்பட்டு கோவில் மண்டபத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். நாளை மஞ்சள் நீராடல் மறுபூஜை, பிரசாதத்துடன் உற்சவ விழா நிறைவு பெறுகிறது.