உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நீங்கள் வெற்றிபெற விரும்பினால் ஆன்மீகத்தின் துணை அவசியம்; குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

நீங்கள் வெற்றிபெற விரும்பினால் ஆன்மீகத்தின் துணை அவசியம்; குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

பெங்களூரு, ஆர்ட் ஆஃப் லிவிங் சர்வதேச மையம், இந்தியா மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து மூத்த அரசு அதிகாரிகள், ஒலிம்பிக் வீரர்கள், முன்னணி தொழிலதிபர்கள், புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பான ஆளுமைகளைத் தன் பக்கம் ஈர்த்துள்ளது. கடந்த 45 ஆண்டுகளாக வன்முறையற்ற மற்றும் மன அழுத்தமற்ற ஒரு உலகத்தை உருவாக்குவதில் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆற்றிய அசாதாரணமான மனிதாபிமானப் பங்களிப்பைப் போற்றுவதற்காக, இந்தச் சிறந்த தலைவர்கள் இங்கு ஒன்றுகூடியுள்ளனர்.

தற்போது நடைபெற்று வரும் ஒரு மாத கால கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த ஆசிரமத்திற்கு வருகை தந்தவர்களில், ஜம்மு காஷ்மீர் அரசின் உணவு, குடிமைப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், மற்றும் இளைஞர் சேவைகள் மற்றும் விளையாட்டுத் துறைக்கான மாநில அமைச்சர் சதீஷ் சர்மாவும் ஒருவர். இவர் ஆர்ட் ஆஃப் லிவிங் சர்வதேச மையத்தில் குருதேவைச் சந்தித்தார். மேலும், 182-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து சர்வதேச மையத்திற்கு வருகை தரும் லட்சக்கணக்கான ஆன்மீகத் தேடுநர்களுக்காகப் புதிதாகத் திறக்கப்பட்ட தியான மண்டபமான த்யான் மந்திர்-இல் நடைபெற்ற ஒரு சிறப்பு சத்சங்கத்திலும் கலந்துகொண்டார். இந்த த்யான் மந்திர் மண்டபம், மே 10, 2026 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் திறந்துவைக்கப்பட்டது.

கூட்டத்தில் உரையாற்றிய குருதேவ், வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் ஆன்மீகம் ஊடுருவிச் செல்ல வேண்டியதன் அவசியத்தைப் பற்றிப் பேசினார். “வணிகம் ஆன்மீகத்தால் வழிநடத்தப்பட வேண்டும். அரசியலும் ஆன்மீகத்தையே அடித்தளமாகக் கொண்டிருக்க வேண்டும். நாம் எந்த வேலையைச் செய்தாலும், அதில் நாம் உண்மையாகவே வெற்றிபெற விரும்பினால், ஆன்மீகத்தின் துணை இன்றியமையாதது,” என்று அவர் கூறினார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குருதேவ் ஆற்றிய விரிவான பணிகளுக்காகத் தனது நன்றியைத் தெரிவித்த சதீஷ் சர்மா, “குருதேவ், எங்களின் மிக கடினமாக காலங்களில், நீங்கள் எங்கள் துணையாக நின்றீர்கள்,” ஒரு நெகிழ்ச்சியான உரையில் அவர் மேலும் கூறுகையில்,  உங்கள் வழிகாட்டுதலின் மூலம், மன அழுத்தம் மற்றும் மன அதிர்ச்சிகளிலிருந்து எங்கள் குழந்தைகள் பெற்ற நிவாரணமும் குணமடைதலும், என் பார்வையில், இந்தியா முழுவதிலும் செய்யப்பட்ட மிகச்சிறந்த பங்களிப்புகளில் ஒன்றாகத் திகழ்கிறது,” என்று கூறினார்.  குருதேவரின் நானரை தசாப்த கால அயராத மனிதாபிமானப் பணிகளைக் கௌரவிக்கும் வகையில், ஆர்ட் ஆஃப் லிவிங் சர்வதேச மையத்தில் நடைபெற்று வரும் 45 ஆண்டு விழாக் கொண்டாட்டங்கள், இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆன்மீகப் பிரதிநிதிகள் எனப் பலதரப்பட்டோரை ஒன்றிணைத்துள்ளன. இன்று ஆசிரமத்திற்கு வருகை தந்து தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தவர்களில், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு, பாராளுமன்ற உறுப்பினர் சுனில் தட்கரே, திரிபுரா பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சருமான பிப்லப் குமார் தேப், இலங்கையின் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நவீன் திசாநாயக்க, தெலங்கானா சட்டமன்றத்தின் உறுப்பினர் தன்பால் சூர்யநாராயணா மற்றும் ஒலிம்பிக் பாரா நீச்சல் வீரர் நிரஞ்சன் முகுந்தன் ஆகியோர் அடங்குவர்.

கொண்டாட்டங்களுக்கு ஒரு சிறப்பு மத நல்லிணக்கப் பரிமாணத்தைச் சேர்க்கும் விதமாக, தி ஆர்ட் ஆஃப் லிவிங் 45 ஆண்டுகளை நிறைவு செய்ததையும், குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கரின் 70வது பிறந்தநாளையும் முன்னிட்டு, தாவூதி போஹ்ரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவரான மேன்மைமிகு சையத்னா தாஹிர் ஃபக்ருதீன் அவர்களின் ஆசீர்வாதங்களையும் நல்வாழ்த்துச் செய்தியையும் போஹ்ரா சமூகத்தின் பிரதிநிதிகளான திரு. சைஃபுதீன் கோப்டி மற்றும் திரு. ஹுசைன் கோப்டி ஆகியோர் வழங்கினர்.

தனது சொந்த வாழ்வில் ஏற்பட்ட ஒரு நெகிழ்ச்சியான காலகட்டத்தைப் பகிர்ந்துகொண்ட சதீஷ் சர்மா, “ஒரு காலத்தில் நான் முற்றிலும் நொறுங்கிப் போயிருந்தேன். கோவிட் காலத்தில் என் தந்தையை இழந்திருந்தேன், நானும் மரணத்திலிருந்து மயிரிழையில் தப்பித்தேன். நான் நொறுங்கிப் போனவனாகவும், திசையற்றவனாகவும் உணர்ந்தேன். அப்போதுதான் நான் என் குடும்பத்துடன் குருதேவின் ஆசிரமத்திற்கு வந்தேன்” என்று கூறினார்.

மேலும் அவர், “அந்த நேரத்தில் குருதேவ் அதிகம் பேசவில்லை, ஆனாலும் ஆழமான ஒன்றை உணர்த்தினார். இருபத்து நான்கு மாதங்களுக்குப் பிறகு, இன்று நான் ஏழு வெவ்வேறு துறைகளைக் கையாளும் ஒரு அமைச்சராக உங்கள் முன் நிற்கிறேன்” என்று கூறினார். குருதேவருடனான தனது உரையாடல் குறித்துப் பேசிய அவர், “குருதேவ், 2027 மற்றும் 2028-ஆம் ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை இருக்கும் என்று நீங்கள் கணித்திருந்தீர்கள். நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், நாங்கள் அந்தத் திசையை நோக்கியே சீராக முன்னேறி வருகிறோம்,” என்று பகிர்ந்துகொண்டார். தங்களது வருகையின் போது, பிரமுகர்கள் பரந்த பசுமையான வளாகத்தைச் சுற்றிப் பார்த்தனர். இதில், இந்தியா முழுவதிலும் இருந்து கொண்டுவரப்பட்ட 19 அரிய இனங்களைச் சேர்ந்த 1,600-க்கும் மேற்பட்ட நாட்டுப் பசுக்களின் இருப்பிடமான ஸ்ரீ ஸ்ரீ கோசாலையும் அடங்கும். அவர்கள் குருகுலம், வேத ஆகம பாடசாலை மற்றும் நவீன கல்வியுடன் காலத்தால் அழியாத வேதகால கோயில் மற்றும் சாஸ்திர மரபுகளைப் புதுப்பித்து வரும் ஆர்ட் ஆஃப் லிவிங்கின் பாரம்பரியப் பள்ளி ஆகியவற்றையும் பார்வையிட்டனர். ஆர்ட் ஆஃப் லிவிங்கின் உள்ளுணர்வுத் திட்டத்தின் பயிற்சியாளர்கள் செய்து காட்டிய செயல்விளக்கங்கள் மூலம், உள்ளுணர்வின் வியக்கத்தக்க சக்திக்கும் அவர்கள் சாட்சிகளாகியுள்ளனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !