திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் விமரிசை
திருத்தணி: திரவுபதியம்மன் கோவிலில் நேற்று நடந்த துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருத்தணி அடுத்த மேல்திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில், நடப்பாண்டிற்கான தீமிதி விழா, கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மூலவருக்கு சந்தன காப்பு மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. மதியம் 1:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை மகாபாரத சொற்பொழிவு மற்றும் இரவு நாடகம் நடந்து வந்தது.
கடந்த 13ம் தேதி திரவுபதியம்மன் திருமணம், 15ம் தேதி சுபத்திரை அம்மன் திருமணம், 18ம் தேதி அர்ச்சுனன் தபசு போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், தொடர்ந்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. மாலை 6:30 மணிக்கு தீமிதி விழா நடந்தது. தொடர்ந்து உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.