உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவொற்றியூர் கல்யாண வரதராஜர் கோவிலில் பிரம்மோத்சவ விழா துவக்கம்

திருவொற்றியூர் கல்யாண வரதராஜர் கோவிலில் பிரம்மோத்சவ விழா துவக்கம்

 திருவொற்றியூர்: கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருவொற்றியூர், காலடிப்பேட்டை – கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, கோவில் மைய மண்டபத்தில், கலசங்கள் நிர்மாணிக்கப்பட்டு, யாக வேள்விகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, சிறப்பு மலர் அலங்காரத்தில், உற்சவர் பவள வண்ண பெருமாள், துவஜாரோகண மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, கொடிமரத்திற்கு பால், பன்னீர், மஞ்சள் நீர், இளநீர் உள்ளிட்ட மங்கள பொருட்களால், அபிஷேகம் நடந்தது. நிறைவாக, கலசநீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது, பக்தர்களின் ‘கோவிந்தா... கோவிந்தா’ முழக்கம் விண்ணதிர செய்தது. அதைத்தொடர்ந்து மாலையில், உற்சவர் பவள வண்ண பெருமாள், சந்திரபிரபை வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியில் வலம் வந்தார். விழாவின் முக்கிய நிகழ்வான, கருட சேவை 30ம் தேதியும்; திருத்தேர் உற்சவம் ஜூன் 3ம் தேதியும் நடக்க உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !