அய்யலுார் கோயில் திருவிழாவில் வினோத நேர்த்திக்கடன் வழிபாடு
வடமதுரை; திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கோயில் திருவிழாவில் பழைய சாதத்தை துடைப்பத்தில் தொட்டு உறவினர் தலையில் வைத்தும், செருப்பை வாயில் கவ்வ செய்தும், தலையில் காலை துாக்கி வைக்கும் வினோத நேர்த்திக்கடன் வழிபாடு நடந்தது.
வடமதுரை அருகே அய்யலுார் தீத்தாகிழவனூரில் சக்தி விநாயகர், மகா மாரியம்மன், மகாகாளியம்மன், துர்க்கையம்மன், பட்டவன் கோயில் மே 31 இரவு கரகம் ஜோடித்தலுடன் துவங்கி பூக்குழி இறங்குதல், மாவிளக்கு, முளைப்பாரி, அக்கினிச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் வழிபாடுகள் நடந்தன.
இறுதி நாளான நேற்று மாலை சேத்தாண்டி வேடம் எனும் வினோத நிகழ்ச்சி நடந்தது. இந்த நேர்த்திக்கடன் செலுத்த விரும்பிய 20 பக்தர்கள் அம்மன் தரிசனம் முடித்து கொண்டு தங்களது உடலில் சேறு, கரி ஆகியவற்றை பூசிக்கொண்டு கோயில் மைதானத்தில் அமர்ந்தனர். கழனீர் தொட்டியில் இருந்து சேகரித்த பழைய சாதத்தை மண் பானைகளில் ஊற்றினர். துடைப்பத்தை கொண்டு பழைய சாதத்தில் தொட்டு அமர்ந்திருந்த 20 பேரும் தலா ஒருமுறை மற்றவர்கள் தலையில் வைத்தும், வாயில் செருப்பை கவ்வ செய்தும், தலையில் காலை துாக்கி வைத்தும் வினோத முறையில் நேர்த்திக்கடன் வழிப்பாட்டை நிறைவு செய்தனர். பின்னர் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் ஊர்வலமாக சென்று கோயில் குளத்தில் குளித்தனர். இந்த வினோத நேர்த்திக்கடன் மூலம் சகிப்புத்தன்மை அதிகரித்து, சண்டை, சச்சரவுகள் இன்றி உறவினர்களுடன் ஒற்றுமையாக வாழலாம் என்பதே முன்னோர்களின் ஏற்பாடாக இந்த வினோத வழிபாடு இக்கிராமத்தில் மட்டும் தொடர்வதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.