கவைய காளியம்மன் கோவில் தேரோட்டம்; பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு
கோவில்பாளையம்; கவைய காளியம்மன் கோவில் தேரோட்டத்தில், பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.
கோவில்பாளையத்தில் உள்ள பழமையான கவைய காளியம்மன் கோவிலில் புதிதாக பல லட்சம் ரூபாய் செலவில் தேர் உருவாக்கப்பட்டது. கடந்த மாதம் வெள்ளோட்டம் நடந்தது. இதை தொடர்ந்து, பூச்சாட்டு திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் அபிஷேக பூஜை நடந்தது. இன்று காலை 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தனர். காலை 11:00 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் வடம் பிடித்து துவக்கி வைத்தார். துடியலூர் சாலை, சத்தி சாலை வழியாகச் சென்று மாலையில் மீண்டும் கோவிலை அடைந்தது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் தேர் மீது எலுமிச்சை கனிகளை வீசி வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். நாளை (4ம் தேதி) மாலை 5:00 மணிக்கு பரிவேட்டையும், இதையடுத்து தெப்பத்தேரும் நடைபெறுகிறது. நாளை (5ம் தேதி) காலை மஞ்சள் நீர் உற்சவமும், அம்மன் திருவீதி உலாவும், மாலை 6:00 மணிக்கு மறு பூஜையும் நடைபெறுகிறது.