கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் நடந்த சுக்ரவார பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் இன்று திரயோதசி திதி மற்றும் வெள்ளிக்கிழமையில் வரும் சுக்ரவார பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. இந்நாளில் சிவனை வழிபடுவதால் சுக்கிர யோகத்துடன் வீட்டில் லட்சுமி கடாட்சம் கிடைக்க செய்யும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நேற்று காலை பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை நந்தி பகவானுக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பாடலீஸ்வரருக்கும், நந்தி பகவானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் பிரதோஷநாயகர் உள் புறப்பாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிவபெருமான், நந்தி, சண்டிகேஸ்வரரை சிறப்பு வழிபாடு செய்தனர்.