சின்னமனூர் மாணிக்கவாசகர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா
சின்னமனூர்: சின்னமனூர் மாணிக்கவாசகர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா நடந்தது.
சின்னமனூரில் மாணிக்கவாசகர் நின்ற கோலத்தில் குரு அம்சத்தில், ருத்ராட்சம் அணிந்து வலது கையில் மாலையுடன் சின்முத்திரை காட்டி, இடது கையில் ஏட்டுடனும் உள்ளார்.மாணிக்க வாசகர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா நிகழ்ச்சிகள் ஜூன் 12 ல் துவங்கியது. திருவிழா நாட்களில் மாலையில் மூலவர் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. ஆனி திருமஞ்சன விழாவில் மாணிக்கவாசகர் குரு பூஜை நேற்று முன்தினம் நடந்தது. முக்கனிகள் இடம் பெற்ற அன்னதானம் நடந்தது.
நேற்று ஆனி உத்திரம் மற்றும் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஆனித் திருமஞ்சன விழாவில் மூன்று உற்ஸவர்கள், விநாயகர், சிவகாமியம்மன், நடராஜர் ஆகியோருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மாணிக்கவாசகருக்கு பிரத்யேக மஞ்சள் அபிஷேகம் நடந்தது. திரளாக பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் நதியா, பரம்பரை அறங்காவலர் திருவாசகம், தமிழாசிரியர்கள் வெங்கடாச்சலம் , வேலு ஆகியோர் செய்திருந்தனர்.
மாணிக்கவாசகர் குருபூஜை தேவதானப்பட்டி:- சில்வார்பட்டி முனையடுவநாயனார் கோயிலில் மாணிக்கவாசகர் குருபூஜை நடந்தது. கோயிலில் விநாயகர், முருகன், நந்தீஸ்வரர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, முனையடுவ நாயனார்,நால்வர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்கை உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு, மஞ்சள், திருமஞ்சன திரவியம், பால், தயிர், இளநீர், பன்னீர்,தேன் பஞ்சாமிர்தம் விபூதி, சந்தனம்உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாணிக்கவாசகர் வாழ்க்கை வரலாறு ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. சிவனடியார்கள் பஞ்சபுராணம், திருமுறைகள் பாடினர். பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.-