உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை – திருத்தணி ரயில்கள் ரத்து; முருகன் கோவிலில் குறைந்த பக்தர்கள்

சென்னை – திருத்தணி ரயில்கள் ரத்து; முருகன் கோவிலில் குறைந்த பக்தர்கள்

திருத்தணி; சென்னையில் இருந்து திருத்தணி வழியாக செல்லும் அனைத்து விரைவு மற்றும் மின்சார ரயில்களும் நேற்று ரத்து செய்யப்பட்டதால், முருகன் கோவிலுக்கு மிக குறைந்த அளவிலேயே பக்தர்கள் வந்தனர்.


திருத்தணி முருகன் கோவிலுக்கு, தமிழகம், ஆந்திரா உட்பட, பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். அரசு விடுமுறை மற்றும் வார விடுமுறையான சனி, ஞாயிறு ஆகிய நாட்களில், வழக்கத்திற்கு மாறாக, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து, குறைந்த பட்சம் 2 – 3 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து மூலவரை தரிசிப்பர். இந்நிலையில், நேற்று முதல் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை ஆகும். இதனால், முருகன் கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவர் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில் நிலைய சந்திப்பு பகுதியில், ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் காரணமாக, நேற்று திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர் வழியாக, சென்னை சென்டரல் வரை செல்லும் அனைத்து விரைவு மற்றும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. சென்னை மார்க்கத்தில் இருந்து திருத்தணி முருகன் கோவிலுக்கு ரயில் மூலம் வரும் பக்தர்கள், இன்று யாரும் வரவில்லை. இதனால், வழக்கத்திற்கு மாறாக, விடுமுறை நாளிலும் முருகன் கோவிலுக்கு மிக குறைந்த அளவிலேயே பக்தர்கள் வந்திருந்தனர். மலைக்கோவிலில் பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடியதால், பொதுவழியில் வெறும், 10 – 15 நிமிடங்களில் பக்தர்கள் மூலவரை நெரிசலின்றி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !