வெள்ளி மயில் வாகனத்தில் வல்லக்கோட்டை முருகன் வீதியுலா
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கும்பாபிஷேக விழா நடைபெற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, நேற்று 1,008 கலச அபிஷேகத்தை தொடந்து, வெள்ளி மயில் வாகன வீதியுலா விமரிசையாக நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோவிலில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பின், கடந்த ஆண்டு ஜூன் 7ம் தேதி, கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. நேற்று முன்தினம் உற்சவர் சண்முகப்பெருமானுக்கு சத்ரு சம்கார யாக பூஜை நடைபெற்றது. அன்று மாலையில் 1,008 கலசங்கள் நிறுவப்பட்டு முதல் கால யாக பூஜை 18 அர்ச்சகர் களின் வேதமந்திர பாராயணத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, நேற்று மதியம் 12:00 மணிக்கு மூலவருக்கு 1,008 கலசாபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து, மூலவருக்குச் சிறப்பு பூஜைகள் நடந்தன. முருகனுக்கு விருப்பமான சிவப்புநிற வெட்சிமலர் மாலை அணிந்து சிறப்பு அலங்காரத்தில் மூலவர் அருள்பாலித்தார்.
அதை தொடர்ந்து, மாலை 4:00 மணிக்கு உற்சவர் வள்ளி, தெய்வானை – சமேத முருகனுக்கு விசேஷ அபிஷேகம் நடைபெற்றது. வெட்சி எனும் செச்சை மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலிதார். இதையடுத்து, திருக் கல்யாண உத்சவம் தொடங்கி கோலாகலமாக நடைபெற்றது. பின், மாங்கல்யதாரணம் நடைபெற்றது. இரவு வெள்ளி மயில் வாகனத்தில் முருகன் எழுந்தருளினார். வல்லக்கோட்டை கிராமத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.