உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உதாசின் பாவாஜி மடத்தில் சாதுர்மாஸ்ய விரதம் துவங்கிய சாதுக்கள்; விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசி

உதாசின் பாவாஜி மடத்தில் சாதுர்மாஸ்ய விரதம் துவங்கிய சாதுக்கள்; விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசி

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மடத்தில், சாதுர்மாஸ்ய விரத தொடக்க விழாவில், காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று ஆசியுரை வழங்கினார்.


காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மடத்தில் வடமாநில சாதுக்கள் 250க்கும் மேற்பட்டோர் சாதுர்மாஸ்ய விரதத்தை இன்று தொடங்கினர். விழாவிற்கு வருகை தந்த காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு, பாவாஜி மடத்தின் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து சங்கராச்சாரியார் விஜயேந்திரர், பாவாஜி மடத்தின் பீடாதிபதி அனுபவானந்துக்கு சால்வை அணிவித்து ஆதிசங்கரர் திருஉருவச் சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார். இதன் பின்னர் ஆசியுரை வழங்கி சாதுக்களின் சாதுர்மாஸ்ய விரதத்தை தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலின் சிறப்புகள், சாதுர்மாஸ்ய விரதத்தின் முக்கியத்துவம் ஆகியன குறித்து வட மாநில சாதுக்களுக்கு விளக்கி ஆசியுரை வழங்கினார். இதையடுத்து உதாசின் பாவாஜி மடத்தின் வடக்கு மாகாணத்திற்கான பீடாதிபதியாக சத்தியமுனிக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு வட மாநில மடத்தின் பீடாதிபதிகள் மகந்த் அத்வைதானந்த் சுவாமிகள், ராமநவமி சுவாமிகள், துர்காதாஸ் சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை உதாசின் பாவாஜி மடத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுதான்சு முனி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். நிகழ்வில் தெலுங்கானா மாநில ஓய்வு பெற்ற டி.ஜி.பி., ஜிதேந்திர கோயல், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மூத்த மேலாளர் சுந்தரேச அய்யர், மேலாளர் அரவிந்த் சுப்பிரமணியன், சங்கரா கல்லூரி முதல்வர் வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !