தமிழகம் திரும்பும் சோழர் கால சிலைகள்; பிரதமர் மோடியின் ஆஸ்திரேலிய பயணத்தில் ஒப்புதல்
தமிழகத்தில் கடத்தப்பட்டு ஆஸி. அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்ட திருவாரூர் கொல்லுமாங்குடி சிவன் கோயில் திரிசூலம், 11ம் நூற்றாண்டை சேர்ந்த பத்ரகாளி அம்மன் உருவம் பொறிக்கப்பட்ட திரிசூலம், 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த பசால்ட் கல்லால் ஆன ஆறுமுக ஸ்கந்தர் சிலை விரைவில் தமிழகம் வர பிரதமர் மோடியின் ஆஸ்திரேலிய பயணத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக இந்தோனேசியா பயணத்தை நிறைவு செய்த அவர், அடுத்த கட்டமாக ஆஸ்திரேலியா சென்றார். மெல்போர்ன் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு இந்திய வம்சாவளியினர் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு, இந்தியா, ஆஸ்திரேலியா தொழில்முனைவோர் சந்திப்பில் தொழிலதிபர்கள் மத்தியில் உரையாற்றினார். தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் இரு நாட்டு தொழில் துறையினர், அரசு அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
பிரதமர் மோடியின் இந்த ஆஸ்திரேலிய பயணத்தில் இந்தியக் கலைப்பொருட்களை ஆஸ்திரேலியா திருப்பியளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதில் பத்ரகாளி தேவியின் உருவம் தாங்கிய உலோகத் திரிசூலம், நந்தியின் கல் சிலை மற்றும் ஆறு முகங்களைக் கொண்ட கார்த்திகேயனின் கல் சிலை ஆகியவை அடங்கும்.
பத்ரகாளி தேவியின் உருவம் தாங்கிய திரிசூலம்
சக்தியின் உக்கிரமான வடிவமான பத்ரகாளி தேவியின் உருவம் உச்சியில் அமைக்கப்பட்ட சடங்குமுறைக்குரிய திரிசூலம் இது. சைவ-சக்தி மரபுகளில் பாதுகாப்பு, தீமையை அழித்தல் மற்றும் தெய்வீக ஆற்றல் ஆகியவற்றைக் குறிக்கிறது. ழிபாட்டு நோக்கங்களுக்காகத் தென்னிந்தியக் கோயில் உலோகக் கலை மரபில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தின் கொல்லுமாங்குடியில் உள்ள ஸ்ரீ காசிவிஸ்வநாதசுவாமி கோயிலைச் சேர்ந்தது. இக்கோயில் கி.பி. 13 முதல் 16-ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில், பிற்காலச் சோழர் முதல் விஜயநகர/நாயக்கர் ஆட்சிக்காலம் வரை கட்டப்பட்டதாகும்.
நந்தி கல் சிலை; இது சிவபெருமானின் வாகனமும் புனிதமான காளையுமான நந்தியைக் குறிக்கிறது. கச்சிதமான விகிதாச்சாரங்கள் மற்றும் அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய தமிழ் சைவக் கோயில் மரபில் செதுக்கப்பட்டுள்ளது. பக்தி, வலிமை மற்றும் தர்மத்தின் அடையாளமாக, கருவறையை நோக்கியவாறு இது பாரம்பரியமாக வைக்கப்படுகிறது. வழக்கமாக அலங்கார மணிகள் மற்றும் மாலைகளுடன், படுத்திருக்கும் நிலையில் இது சித்தரிக்கப்படுகிறது. தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம், கொல்லுமாங்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ காசிவிஸ்வநாதசுவாமி கோயிலைச் சேர்ந்தது; இது கி.பி. 13 முதல் 16-ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்தது.
முருகன் சிலை; இச்சிலை தமிழகத்தின் மணம்பாடி நாகநாதசாமி கோவிலை சேர்ந்தது. ஞானம், வீரம் மற்றும் தெய்வீகப் பாதுகாப்பையும் பறைசாற்றும் வகையில் ஆறு தலைகளுடன் கூடிய முருகனக சிலையாகும். நேர்த்தியான மற்றும் நுணுக்கமான அலங்கார வேலைபாடுகளுக்கு பெயர் பெற்ற சோழர் காலத்தில் செதுக்கப்பட்டவை ஆகும். இக்கோவிலானது கிபி 11ம் நூற்றாண்டன் முற்பகுதியில் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும்.