திருவெண்காடு விலங்கு தறித்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருவெண்காட்டில் தென்மேற்கு மூலையில் விலங்கு தறித்த விநாயகர் கோவில் அமைந்துள்ளது. முற்காலத்தில் திருவெண்காட்டாராகிய பட்டினத்தார் துறவு மேற்கொண்டபோது அமைச்சர் சேந்தனாரை அழைத்து செல்வம் அனைத்தையும் தானமாக வழங்கிட கூறினார். அவ்வாறே அமைச்சரும் வழங்க பூம்புகாரை ஆண்ட மன்னன் கணக்கு கேட்க கணக்கு இல்லை என கூறியதால் ஆத்திரமடைந்த மன்னன் சேந்தனாரை விலங்கு பூட்டி சிறையில் அடைத்தார். இதனையடுத்து சேந்தனார் குடும்பத்தினர் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வர சுவாமியிடம் முறையிட சிவபெருமான் தனது முதல் மகனாகிய விநாயகரை அழைத்து சேந்தனாரை விடுவிக்க சொல்லியுள்ளார். விநாயகப் பெருமான் சேந்தனாரின் விலங்கு தறித்து (விலங்கு உடைத்து) விடுவித்தார் என்பது வரலாறு. அந்த விநாயகரே திருவெண்காடு தென்மேற்கு மூலையில் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் இக்கோவிலின் திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டு இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 7ம் தேதி பூர்வாங்க பூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. இன்று காலை தசமி திதி அசுவினி நட்சத்திரம் அமிர்தயோகம் கூடிய 9:30 மணிக்கு கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு, 10 மணிக்கு வேத மந்திரங்கள் ஓத சோமசுந்தர சிவாச்சாரியார் தலைமையிலானோர் கலசங்களில் புனித நீர் சேர்த்து கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து 10:30 மணிக்கு மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.