திருச்செந்துாரில் புதுச்சேரி பக்தர்கள் தங்க விடுதி: அமைச்சர் ராஜேஷ்குமார்
புதுச்சேரி: புதுச்சேரி பக்தர்கள் தங்குவதற்கு திருச்செந்துாரில் விடுதி கட்ட இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி காங்., கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக சுற்றுலா துறை அமைச்சர் ராஜேஷ்குமார் பேசுகையில்: புதுச்சேரி விமான நிலையத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கேட்டுள்ளனர். தமிழக முதல்வரிடம் பேசி அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். திருச்செந்துார் கோவிலுக்கு வரும் புதுச்சேரி பக்தர்களுக்கு விருந்தினர் விடுதி கட்ட, இடம் கேட்டுள்ளனர். அங்கு தேவையான இடம் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம், புதுச்சேரி பகுதிகள் பிரித்து பார்க்க முடியாத அளவிற்கு பின்னிபிணைந்துள்ளது. புதுச்சேரியில் பெரிய கட்சி காங்., தான். காங்., ஆட்சியில் புதுச்சேரியில் பல நல்ல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அமைச்சர் பதவி என்பது முள் கீரிடம். மக்களின் கோரிக்கைகளை செய்வதுதான் எங்கள் எண்ணம். அனைத்து கால கட்டத்திலும், காங்., கட்சி ஆதரவுடன்தான் திராவிட கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. தமிழகத்தில் லஞ்சம் ஊழல் இல்லாத ஆட்சி நடந்து வருகிறது. காமராஜர் பிறந்த நாளையொட்டி, லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற இயக்கம் துவக்கப்பட உள்ளது என்றார்.