உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளம் கவுமாரியம்மன் கோவில் திருவிழா; அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன்

பெரியகுளம் கவுமாரியம்மன் கோவில் திருவிழா; அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன்

பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் நிறைவு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் விடிய, விடிய அக்னிசட்டி எடுத்து அம்மனை வழிபட்டனர்.


பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழா ஜூன் 30ல் சாட்டுதல் மற்றும் கம்பம் நடப்பட்டது. ஜூலை 6 ல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. தினமும் அம்மன் ரிஷபம், குதிரை, சிம்மம், யானை, அன்னபட்சி உட்பட பல்வேறு வாகனத்தில் வீதி உலா வந்தார். பத்து நாட்கள் நடந்த திருவிழாவில் இன்று ஜூலை 15ல், அதிகாலை 3:00 மணி முதல் உள்ளூர் மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து அம்மனை வழிபட்டனர். பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் 20 அடி வேலால் கன்னத்தில் அலகு குத்தி அம்மனை தரிசனம் செய்தார். ஏராளமான பக்தர்கள் இரட்டை அக்னிசட்டி, தொட்டிலில் குழந்தையை வைத்தும், கன்னம், நாக்கில் அலகு குத்தி அதிகாலை முதல் இரவு வரை அக்னிசட்டி எடுத்து அம்மனை வழிபட்டனர். மலர் அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அம்மனை தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகத்தினர் அவருக்கு மரியாதை செய்தனர். கோயில் வளாகத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு, டி.எஸ்.பி., நல்லு தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சத்ய சாயி சேவா சங்கம் தன்னார்வலர்கள் இலவச காலணி பாதுகாப்பு சேவை செய்தனர். ஜூலை 21ல் மறுபூஜை, பாலாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் சுந்தரி மற்றும் மண்டகபடிதாரர்கள், தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !