உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோவிலில் புதிய கட்டுமானம் கோர்ட் உத்தரவுபடி தொல்லியல் துறையினர் ஆய்வு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் புதிய கட்டுமானம் கோர்ட் உத்தரவுபடி தொல்லியல் துறையினர் ஆய்வு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், புதிய கட்டுமானங்கள் குறித்து, சென்னை ஐகோர்ட் உத்தரவுபடி, தொல்லியல் துறையினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

உலக புகழ்பெற்ற புராதான கோவிலான, சிதம்பரம் நடராஜர் கோவிலில், அனுமதியின்றி பொது தீட்சிதர்கள், 10 ஆயிரம் சதுர அடியில் மண்டபம் கட்டியது, பரதநாட்டிய அரங்கை கோ சாலையாக மாற்றியது மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என, சிதம்பரத்தை சேர்ந்த தெய்வீக பக்தர்கள் பேரவை தலைவர் ராதாகிருஷ்ணன், கடந்தாண்டு, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும், சிதம்பரம் நடராஜர் கோவிலில் மாநில அளவிலான நிபுணர்கள் குழு ஒப்புதல் பெறாமல் கோபுரங்களை சுற்றி பூங்கா அமைப்பதை எதிர்த்தும், அனுமதி பெறாமல் கோவிலுக்குள் கட்டுமான பணிகள் மேற்கொள்ள பொது தீட்சிதர்கள் குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என அறநிலையத்துறை சார்பிலும், சென்னை ஐகோர்ட்டில் வழக்க தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய தொல்லியல் துறை ஓய்வு பெற்ற தலைமை இணை இயக்குநர் நம்பிராஜன் தலைமையில், 14 பேர் உறுப்பினர்கள் கொண்ட குழு அமைத்து நடராஜர் கோவிலில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, கடந்த 23ம் தேதி ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, இந்திய தொல்லியல் துறை ஓய்வு பெற்ற தலைமை இணை இயக்குநர் நம்பிராஜன் தலைமையில் ராஜேஷ், சேகர் மற்றும் கடலுார் மாவட்ட அறநிலைத்துறை இணை ஆணையர் ஜோதி, உதவி ஆணையர் சிவக்குமார் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழுவினர், நேற்று சிதம்பரம் நடராஜர் கோவிலின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், கோவில் நுழைவு பகுதியின் இடது புறம் உள்ள அன்னதான கூட கட்டுமான பணி, புதிதாக அமைக்கப்பட்ட கோ சாலை, யானை மண்டபம் மற்றும் கோவில் உள்பிரகாரங்கள், வெளி பிரகாரங்கள், 63 நாயன்மார்கள் கோவில், சித்சபை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

தொல்லியல் துறையினர் திடீர் ஆய்வு நடத்தியதால் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !