மேல்சித்தாமூர் ஜெயின் கோவிலில் மகாவீரர் ஜெயந்தி ரத உற்சவம்
செஞ்சி: மேல்சித்தாமூர் பார்சுவநாதர் ஜெயின் கோவிலில் நடந்த ரத உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக் தர்கள் வடம் பிடித்தனர். மேல்சித்தாமூரில் உள்ள பழமையான பார்சுவநாதர் ஜெயின் கோவிலில் ஆண்டுதோறும் மகா வீர் ஜெயந்தி அன்று ரத உற்சவம் நடந்து வருகிறது. இந்த ஆண்டு ரத உற்சவம் கடந்த மாதம் 17ம் தேதி நாந்திமங்கலம் தர்ப்பக் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் பார்சுவநாதருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. காலை, மாலையில் சாமி வீதி உலா நடந்தது. மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று 1008 பார்சுவநாதர் ரத உற்சவம் நடந்தது. உற்சவர் பார்சுவநாதரை காலை 8.30 மணிக்கு ரதத்தில் ஏற்றி வடம் பிடித்தனர். மாடவீதிகள் வழியாக ரத உற்சவம் நடந்தது. மேல்சித்தாமூர் மடாதிபதி லட்சுமி சேன மகா சுவாமிகள் வடம் பிடிப்பதை துவக்கி வைத்தார். ஆயிரக்கணக்கான ஜெயின் சமூகத்தினர் வந்திருந்தனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீபார்சுவநாதர் திகம்பரர் ஜெயின் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.