காமாட்சியம்மனுக்கு பாலபிஷேம் பால் குடத்துடன் பக்தர்கள் ஊர்வலம்
சென்னிமலை: சென்னிமலை காமாட்சியம்மன் பொங்கல் விழாவுக்காக, 505 குடம் பால் அபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. சென்னிமலை காமாட்சி அம்மன் கோவில் பொங்கல் விழா, 16ம் தேதி நடக்கிறது. அதை முன்னிட்டு கடந்த, 8ம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று காலை பால் குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருவீதிகளில் மேளதாளத்துடன் பக்தர்கள் ஊர்வலமாக பால் குடங்களை சுமந்தபடி வந்தனர். பால் குடங்கள், சென்னிமலையில் நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக வந்து, கோவிலை அடைந்தபின், காமாட்சியம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. பின், அன்னதானம் வழங்கப்பட்டது. பொங்கல் விழாவில், நாளை கும்பம் பாலித்தலும், 15ம் தேதி காமட்சியம்மன் மாவிளக்குடன் திருவீதிகளில் பவனி வந்து, தீபாராதனை நடக்கிறது. 16ம் தேதி காலை பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை, 3 மணிக்கு மேலப்பாளையம் மாதேஸ்வர நகரில் இருந்து அலகு தேர் ஊர்வலமாக புறப்பட்டு, கோவிலை வந்துசேரும். 4 மணிக்கு, களத்துக்காட்டில் இருந்து மாவிளக்கு ஊர்வலம் புறப்பட்டு, கோவிலை வந்தடையும். 17ம் தேதி இரவு மஞ்சள் நீர், மறுபூஜை உடன் விழா நிறைவு பெறுகிறது.