பேரம்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி பிரம்மோற்சவம்
ADDED :4603 days ago
பேரம்பாக்கம்: பேரம்பாக்கத்தில் உள்ள, பஞ்ச பாண்டவர் உடனுறை திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த அக்னி பிரம்மோற்சவ விழாவில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள பேரம்பாக்கம் பஞ்ச பாண்டவர் உடனுறை திரவுபதி அம்மன் கோவிலில், கடந்த, 27ம் தேதி கொடியேற்றத்துடன் அக்னி பிரம்மோற்சவ விழா துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவில் சுவாமி திருவீதி உலாவும் நடந்தது. அக்னி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான துரியோதனன் படுகள நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இந்நிகழ்ச்சியினை காண பேரம்பாக்கத்தை அடுத்துள்ள இருளஞ்சேரி, நரசிங்கபுரம், கூவம், கொண்டஞ்சேரி மற்றும் இதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.