திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா
திருத்தணி: திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த தீ மிதி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர். திருவாலங்காடு ஒன்றியம், கூளூர் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், கடந்த, 12ம் தேதி, தீ மிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை ஒட்டி தினமும் காலை, 8:00 மணிக்கு, மூலவர் திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் அம்மன் திருவீதியுலாவும் நடந்தது. இரவு, 10:00 மணிக்கு மகா பாரத நாடகம் நடைபெற்றது. கடந்த 21ம் தேதி, காலை, 8:30 மணிக்கு துரியோதனன் படுகளம் நடந்தது. பின்னர் கிராம பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். தொடர்ந்து, மாலை, 6:30 மணிக்கு, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து, தீ மிதித்தனர். தொடர்ந்து உற்சவர் திரவுபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில், திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.