வீரமங்கள ஆஞ்சநேயர்கோவிலில் ஆண்டு விழா
ADDED :4473 days ago
நல்லாட்டூர்:வீரமங்கள ஆஞ்சநேயர் கோவிலில், 15ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.திருத்தணி அடுத்த, நல்லாட்டூர் கிராமத்தில் உள்ள வீரமங்கள ஆஞ்சநேயர் கோவிலின், 15ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தில், ஒரு யாகசாலை, 108 கலசங்கள் வைத்து கணபதி ஹோமம் நடந்தது.காலை, 9:00 மணிக்கு மூலவர் வீரமங்கள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு அனுமத் மற்றும் சுதர்சன ஹோமம் நடந்தது. பின்னர், கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், முருகர் மற்றும் ராமர், லட்சுமணன், சீதாதேவி ஆகிய சன்னிதிகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.மாலை, 4:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, ஹரிகதை மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.