புதுச்சேரி விநாயகர் சிலைகள் விஜர்சனத்திற்கு ஏற்பாடு
ADDED :4662 days ago
புதுச்சேரி: விநாயகர் சிலைகள் வரும் 13ம் தேதி விஜர்சனம் செய்யப்படுவதையொட்டி, பழைய துறைமுகத்தில் விளக்குகள் சரி செய்யும் பணி நடந்தது. விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 9ம் தேதி நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரியில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. பூஜைகள் முடிந்து வரும் 13ம் தேதி, விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் விஜர்சனம் செய்யப்படுகிறது. அதையொட்டி, பழைய துறைமுக பகுதிகளில் உள்ள மின் விளக்குகள், துறைமுக துறை சார்பில் சரி செய்யும் பணி நடந்து வருகிறது. துறைமுக வாயில் பகுதியில் வர்ணம் பூசும் பணியும் நடக்கிறது.