உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தூத்துக்குடி சிவன் கோயில் திருக்கல்யாண தேரோட்டம் கோலாகலம்!

தூத்துக்குடி சிவன் கோயில் திருக்கல்யாண தேரோட்டம் கோலாகலம்!

தூத்துக்குடி: நம பார்வதி பதயே கோஷம் விண்ணைப்பிளக்க தூத்துக்குடி சிவன் கோயில் பாகம்பிரியாள் அம்மன் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. கொளுத்திய வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து உற்சாகமாக இழுத்தனர். தூத்துக்குடி சிவன் கோயில் ஐப்பசி திருக் கல்யாண திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி விமரிசையாக நடந்து வருகிறது. விழாவை ஒட்டி நேற்று பாகம்பிரியாள் அம்மன் தேரோட்டம் நடந்தது. இதனை ஒட்டி நேற்று காலை 6 மணிக்கு பாகம்பிரியாள் அம்மனுக்கு மஞ்சள்பொடி, மாபொடி, திரவியபொடி, பால், பஞ்சாமிர்தம், தயிர், பழச்சாறுகள் தேன், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. அதன் பிறகு சிறப்பு தீபாராதனைகள், சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து காலை 10.30 மணிக்கு பாகம்பிரியாள் அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேருக்கு மேளதாளம் முழங்க அழைத்து வரப்பட்டார். தேரில் வைத்து பாகம்பிரியாளுக்கு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. முன்னதாக தேரடி மாடனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனை தொடர்ந்து சரியாக 10.56 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர், ஏ.வி.எம் மணி, தேரோட்ட பவனிவிழா குழுத் தலைவர் சந்திரசேகர், பி.எஸ்.கே.ஆறுமுகம், டி.ஏ தெய்வநாயகம், அபிராமி சந்திரசேகர், அன்னபூர்ணா போற்றி வேல்பிள்ளை, அருணா ஜூவல்லர்ஸ் பழனியப்பன், மாநகராட்சி கண்காணிப்பாளர் குருமூர்த்தி, திருவனந்தல் அன்பர்கள் சபை மாரியப்பன், சுப்பிரமணியசுவாமி மகிமை திருநாவுக்கரசு, அறநிலையத்துறை ஆய்வாளர் நயினார், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர்கள் கோட்ராஜா, தங்கமாரியப்பன், கோயில் கணக்கர் சண்முகசுந்தரம், மணியம் விநாயகம், கோமதிநாயகம் மற்றும் சுப்பையா மற்றும் முக்கிய பிரமுகர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கொளுத்திய வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் ஹர நம பார்வதி பதயே, ஹர, ஹர மகாதேவா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேருக்கு முன்பாக யானை, குதிரை, ஒட்டகம் சென்றது. கோலாட்டமும் நடந்தது. மேளவாத்தியங்கள், செண்டை மேளமும் முழங்கியது. ரதவீதி வழியாக உலா வந்த தேர் சரியாக மதியம் 1.35 மணிக்கு நிலையத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து பூஜைகள் நடந்தது. இன்று பாகம்பிரியாள் அம்மன் சிவபூஜை செய்யும் அலங்காரத்தில் பூம்பல்லக்கு நடக்கிறது. ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவின் மிக முக்கிய விழாவான திருக்கல்யாண திருவிழா நாளை நடக்கிறது. இதனை ஒட்டி காலை 8 மணிக்கு சத்திரம் பஸ் ஸ்டாப் எதிரே உள்ள தபசு மண்டபத்திற்கு பாகம்பிரியாள் எழுந்தருளல் நடக்கிறது.பின்னர் தபசு மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மாலை 5 மணிக்கு மேல் ரிஷப வாகனத்தில் சங்கரராமேஸ்வரர் எழுந்தருளி வந்து அம்மனுக்கு காட்சிதருதல் நடக்கிறது. பின்னர் சுவாமி, அம்மன் மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது. பின்னர் சுவாமியும், அம்மனும் ரதவீதி உலா வருதல் நடக்கிறது. பின்னர் கோயிலில் வைத்து இரவு 8 மணி முதல் பத்து மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது. அம்மனுக்கு, சுவாமி தாலிகட்டும் வைபவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !