உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையை சுத்தமாக பராமரிக்க புண்ணியம் பூங்காவனம் திட்டம்!

சபரிமலையை சுத்தமாக பராமரிக்க புண்ணியம் பூங்காவனம் திட்டம்!

சபரிமலை: சபரிமலையை சுத்தமாக பாதுகாக்க, "புண்ணியம் பூங்காவனம் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் சபரிமலையில், கழிவுகளும் மலைபோல் குவிகின்றன. முக்கியமாக பிளாஸ்டிக் குப்பைகள், சபரிமலை காடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதையடுத்து, குப்பைகளை அள்ள, துப்புரவு பணியாளர்களை மட்டும் நியமித்தால் போதாது, பக்தர்கள், ஊழியர்கள், போலீசார் மற்றும் அதிகாரிகளும், இப்பணியில் ஈடுபட வேண்டும் என, முடிவு செய்யப்பட்டது. இந்த அடிப்படையில், புண்ணியம் பூங்காவனம் என்ற திட்டம் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் காலை, 9:00 மணி முதல் பகல், 12:00 மணி வரை, இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதல் நாள் இந்த நிகழ்ச்சியில் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு குத்துவிளக்கேற்றினார். தேவசம்போர்டு அமைச்சர் சிவகுமார் குப்பைகளை அள்ளி, திட்டத்தை துவங்கி வைத்தார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை சார்பான ஊழியர்கள், இதில் கலந்து கொள்கின்றனர். "குப்பைகளை அள்ளுவதன் மூலம், அய்யப்பனின் பூங்காவனம் சுத்தமாக பராமரிக்கப்படுவதோடு, மிகச்சிறந்த அய்யப்ப சேவையாக இருக்கிறது என, இதில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !