சென்னிமலை முருகன் கோவில் தைப்பூசம் நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்
சென்னிமலை: சென்னிமலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், தைப்பூசத்தேர் திருவிழா ஜனவரி, 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சென்னிமலை மலைக்கு மேல் எழுந்தருளிய சுப்பிரமணிய ஸ்வாமி, வள்ளி, தெய்வானைக்கு ஆண்டுதோறும் தைப்பூச தேர் பெருவிழா, 15 நாட்கள் நடக்கும். இக்கோவிலில்தான், கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்துள்ளது. பழனி முருகன் கோவில், பங்குனி உத்திர தேர்திருவிழா போல, இங்கும் சிறப்பாக நடத்தப்படும். இன்று (8ம் தேதி) காலை கணபதி ஹோமமும், இரவு கிராமசாந்தியும் நடக்கிறது. 9ம் தேதி காலை, 7 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. 10ம் தேதி இரவு, பல்லக்கு சேவையும், 11ம் தேதி இரவு, 8 மணிக்கு மயில் வாகனக்காட்சி, 13 இரவு, 8 மணிக்கு பஞ்சமூர்த்தி புறப்பாடும், வெள்ளிமயில் வாகனக்காட்சியும் நடக்கிறது. வரும், 14ம் தேதி இரவு, யானை வாகனத்தில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் திருவீதி உலாவும், 15ம் தேதி மாலை, 6 மணிக்கு கைலயங்கிரி வாகனக்காட்சி, இரவு, 9 மணிக்கு காமதேனு வாகனக்காட்சி, 16ம் தேதி இரவு, 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8 மணிக்கு வசந்த திருக்கல்யாணம் நடக்கிறது. 17ம் தேதி அதிகாலை, 3 மணிக்கு மகா அபிஷேகம், காலை, ஏழு மணிக்குள் தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. திருத்தேரோட்டத்தில், அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன், அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், நடராஜ், கலெக்டர் சண்முகம் உட்பட பலர் பங்கேற்கின்றனர். 18ம் தேதி மாலை, 5 மணிக்கு தேர் நிலை வந்தடையும். 19ம் தேதி இரவு பரிவேட்டை குதிரை வாகனக்காட்சி, 20ம் தேதி இரவு தெப்போற்சவம், பூத வாகன காட்சியும் நடக்கிறது. வரும், 21ம் தேதி இரவு மகாதரிசனமும், அன்று நடராஜபெருமான் வெள்ளி விமானத்திலும், சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை உடன் எழுந்தருளி, வெள்ளிமயில் வாகனத்திலும் திருவீதி உலா நடக்கிறது. அன்று சென்னிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். 22ம் தேதி, மஞ்சள் நீர் அபிஷேகத்துடன், 15 நாள் தைப்பூச தேர் பெருவிழா நிறைவடைகிறது. விழா நாட்களில் தினமும், இரவு, 9 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் சபர்மதி, செயல் அலுவலர் பசவராஜன், அலுவலர்கள், அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.