வீரட்டானேஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டம்
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் கடந்த 6ம் தேதி மாசிமகப் பெருவிழா துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது.காலை 8 மணிக்கு விக்னேஷ்வரபூஜை, மூலமூர்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஆனந்தவல்லி சமேத சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் தேர் மண்டபத்திற்கு எழுந்தருளினார்.காலை 9: 30 மணிக்கு சிறப்பு வழிபாடுகளுக்கு பிறகு பக்தர்களின் நமச்சிவாய கோஷம் முழங்க, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர்முக்கிய வீதிகள் வழியாக சென்று மாலை 3:30 மணிக்கு நிலையை அடைந்தது.பேரூராட்சி தலைவர் தேவிமுருகன், தேர் உபயதாரர் சோமசுந்தரம், லோகநாயகி, கவுன்சிலர்கள் சம்பத், ஜெயபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.