உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனூர் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம்: 3 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

மேல்மலையனூர் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம்: 3 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் 3 லட்சம் பக்தர்கள் திரண்டனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, வெள்ளி கவசம் அணிவித்தனர். அமாவாசையன்று ஞாயிற்று கிழமையும், இன்று தெலுங்கு வருட பிறப்பு என இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர். கூட்டம் தொடர்ந்து அதிகரித்தபடி இருந்ததால் வழக்கத்தை விட ஒரு மணி நேரம் முன்னதாக ஊஞ்சல் உற்சவத்தை நடத்தினர். இரவு 11 மணிக்கு துவங்கி 12.30 மணிவரை உற்சவம் நடந்தது. ஊஞ்சல் மண்டபத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஏழுந்தருளியதும், கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். ஏராளமான பக்தர்கள் சாமி வந்து ஆடினர். இதில் இந்து சமாய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் தலைவர் சரவணன் மற்றும் அறங்காவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி டி.எஸ்.பி., முரளிதரன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளை செய்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !