பாம்பன் சுவாமி மடத்தில் குருபூஜை: குமரகுருதாச சுவாமிகள் தேரோட்டம்!
சிதம்பரம்: சிதம்பரம் பாம்பன் சுவாமி மடம் குமரகுருதாச சுவாமிகள் குருபூஜையையொட்டி தேரோட்டம் நடந்தது. சிதம்பரம் சபாநாயர் தெரு பாம்பன் சுவாமிகள் மடத்தில் ஜீவமுத்தி அடைந்த குமரகுருதாச சுவாமிகள் குருபூஜை விழா நேற்று நடந்தது. இதனையொட்டி கடந்த 19ம் தேதி கணபதி ஹோமம் உள்ளிட்டசிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு கொடியேற்றத்துடன் குருபூஜை விழா துவங்கியது. இரவு பாம்பன் சுவாமிகள் கே.எஸ்.ஆர்.நகர், ஞானப்பிரகாசம் குளத்தெரு பகுதிகளில் வீதி உலா காட்சி நடந்தது. 20ம் தேதி பாம்பன் சுவாமி குருபூஜையையொட்டி சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு குமரகுருதாச சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் பக்தர்களுக்கு கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இதனைதொடர்ந்து மகேஸ்வர பூஜை மற்றும் சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு சிறப்பு அலங்காரத்தில் பாம்பன் சுவாமிகள் புறப்பாடு செய்து நடராஜர் கோவில் நான்கு வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்க காட்சியளித்தார். அப்போது பக்தர்கள் பாம்பன் சுவாமிகள் அருளிய பாடல்களை பாடிச்சென்றனர். உர்சவமூர்த்திக்கு 108 சங்காபிஷேகம் சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. மதியம் கொடி இறக்கம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.