பரமக்குடி வைகாசித் திருவிழா வைகையில் எழுந்தருளிய கள்ளழகர்!
பரமக்குடி : பரமக்குடி எமனேஸ்வரம் பெருந்தேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயிலில், வைகாசி பவுர்ணமி வசந்தோத்சவ திருவிழாவை முன்னிட்டு ஜூன் 12 நள்ளிரவில் பெருமாள் "கள்ளழகர் திருக்கோலத்துடன் புஷ்பப்பல்லக்கில், பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன், வைகை ஆற்றில் இறங்கினார்.நேற்று காலை 7 மணிக்கு மேலச்சத்திரம் மண்டகப்படியை அடைந்தார். பின்னர் அங்கிருந்து காலை 10 மணிக்கு, பெருமாள் குதிரை வாகனத்தில் அலங்காரமாகி, பரமக்குடி வீதிகளின் வழியாக வந்து, மாலை 5 மணிக்கு வைகை ஆற்றில், ஆயிரம் பொன்சப்பரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து இரவு நயினார் கோவில் ரோட்டின் வழியாக ஜீவாநகர், மகாலெட்சுமி என அனைத்து நெசவாளர் காலனிகளுக்கும் சென்று, நள்ளிரவு 1மணிக்கு வண்டியூர் அடைந்தார். அங்கு சந்தனக்காப்பு சேவை நடந்தது. இன்று (ஜூன் 14) இரவு 7 மணிக்கு பெருமாள் சேஷ வாகனத்தில் அலங்காரமாகி, மாணிக்கா மண்டகப்படியில், மண்டூக மகரிஷிக்கு (தவளை உருவம்) சாபவிமோசனம் அளிக்க உள்ளார். தொடர்ந்து கருட, அனுமார் வாகனத்தில் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி அவதார சேவை சாதிக்க உள்ளார். ஜூன் 17 ல், மீண்டும் அழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் இருந்து, மறுநாள் காலை கோயிலுக்கு எழுந்தருளுகிறார். இரவு கண்ணாடி சேவை நடைபெறுகிறது. ஜூன் 20 இரவு கருட சேவையுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்ட்ர சபையினர் செய்து வருகின்றனர்.