கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் ராகுகேது பெயர்ச்சி பூஜை!
ADDED :4175 days ago
கடலூர்: கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் ராகுகேது பெயர்ச்சி சிறப்பு பூஜைகள் நடந்தது. கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர் கோவிலில் ராகுகேது பெயர்ச்சி சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதன்படி, நேற்று முன்தினம், காலை 11:00 மணிக்கு நவக்கிரக சுவாமிகளுக்கு பால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு நவக்கிரக சுவாமிகளுக்கு தனித்தனியே கலசங்கள் வைத்து, பூஜை செய்யப்பட்டது. ராகுகேது சுவாமிக்கு மூலமந்திரம், வேத மந்திரம், பாலா மந்திரங்கள் செய்யப்பட்டு பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, புனித நீர் அடங்கிய கலசங்கள் கோவில் உள் பிரகாரத்தை வலம் வந்து, நவக்கிரக சுவாமிகளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.