செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவில் இந்து சமய அறநிலையத் துறை ஏற்க கோரிக்கை!
செஞ்சி: செஞ்சி வெங்கட்ரமணர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை ஏற்று நடத்த வேண்டும் என ஊழல் எதிப்பு இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். செஞ்சி ஊழல் எதிப்பு இயக்க பகுதி செயலாளர் கண்ணாயிரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையருக்கு அனுப்பிய மனு: செஞ்சி கோட்டையில் 500 ஆண்டுகள் பழமையான வெங்கட்ரமணர் கோவிலில் பூஜைகளை செய்ய நிரந்தர ஆட்கள் இல்லை. கோவில் உள்ளே வெளிச்சமின்றி இருண்டுள்ளது. பக்தர்களுக்கு குடிநீர் உட்பட எந்த வசதியும் இல்லை. திடீரென பக்தர்கள் கூட்டம் அதிகமாகும் போது கட்டுப்படுத்தவும் வழியில்லை.பக்தர்கள் கோவிலுக்கு காணிக்கை செலுத்த நினைத்தாலும் எப்படி செலுத்துவது என தெரியவில்லை. இதனால் கோவிலுக்கு வரவேண்டிய லட்கணக்கான வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அர்ச்சனை செய்யவும், பிரசாத பொருட்களை கோவிலில் வாங்கவும் வழியில்லை. பக்தர்கள் தானாக முன்வந்து நித்திய பூஜைகளை செய்து வருகின்றனர். கோவிலில் நித்திய பூஜைகள் தடையின்றி நடக்கவும், கோவிலுக்கு வரவேண்டிய வருவாயை முறைப்படுத்தவும் இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோவிலை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.