அம்மன் கோவில் ஆடி திருவிழாக்களில் பக்தர்கள் பரவசம்!
ADDED :4392 days ago
செங்குன்றம் : அம்மன் கோவில்களில் நடந்த ஆடி திருவிழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.செங்குன்றம், பனையாத்தம்மன் கோவிலில், கூழ்வார்த்தல், கும்பம் போடுதல் நிகழ்ச்சிகளுடன் 57ம் ஆண்டு ஆடி திருவிழா நேற்று முன் தினம் இரவு நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு, ஆன்மீக சொற்பொழிவு, நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன. வாணவேடிக்கையுடன் அம்மன் திருவீதி ஊர்வலம் நடந்தது.கொருக்குப்பேட்டை, அரிநாராயணபுரம், பெரியபாளையத்தம்மன் கோவிலின் 16ம் ஆண்டு விழா மற்றும் மூன்றாவது வார ஆடி மாத ஞானாம்பிகை உற்சவம் நேற்றுமுன்தினம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தன. மதியம், அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. மலர்களால் அலங்கரித்த அம்மன் ஊர்வலமும் நடந்தது.