திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கலைப்பு!
ADDED :4259 days ago
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு, நேற்று கலைக்கப்பட்டது. ஆந்திர மாநில அரசு, அனைத்து கோவில்களின் அறங்காவலர் குழுக்களை கலைக்க, கடந்த வாரம், அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கான அரசாணை, நேற்று, திருப்பதி தேவஸ்தானத்தை வந்தடைந்தது. அதைத் தொடர்ந்து, நேற்று, அறங்காவலர் குழு கலைக்கப்பட்டதாக, தேவஸ்தான செயல் அதிகாரி கோபால் தெரிவித்தார். அறங்காவலர் குழுத்தலைவர் பாபிராஜு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், 13 பேர், தங்கள் பதவியை இழந்தனர். அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அலுவலகம், குடியிருப்பு மற்றும் வாகனங்களை, தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.புதிய அறங்காவலர் குழு, விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளது. இதில், 18 பேர் உறுப்பினராக பொறுப்பேற்க உள்ளனர். ஒரு இடம், சிறுபான்மையினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.