உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீண்டும் எழுகிறது மண்ணில் புதைந்த ஆலயம்!

மீண்டும் எழுகிறது மண்ணில் புதைந்த ஆலயம்!

உத்திரமேரூரை அடுத்த அத்தியூர் கிராமத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பாக இடிந்து, மண்ணோடு புதைந்து போன சிவாலயத்தை அப்பகுதி மக்கள் பராமரித்து, மீண்டும் ஆலயமாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகிலுள்ளது அத்தியூர் கிராமம். இங்கு மிகவும் பழமையான கைலாசநாதர் கோயில் பல ஆண்டுகளுக்கு முன்பாக இடிந்து மண்ணுக்குள் புதைந்து போனது. கடந்த 2010, ஜூன்18ல் மண்ணுக்குள் புதைந்த பகுதிக்கு அருகாமையில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், ஏரி நீர் வரத்து கால்வாய் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.  அப்போது, மண்ணில் புதைந்திருந்த, நந்தீஸ்வரர், திரிபுர சுந்தரி சமேத கைலாசநாதர் கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அச்சமயம் அந்த வழியில் சென்ற ஒருவர், அப்பகுதியில் பாழடைந்த ஒரு கிணற்றை குறிப்பிட்டு, அதில் பெருமாள் சிலை புதைந்திருப்பதாகக் கூறினார். அதனைத் தொடர்ந்து, அவர் கூறிய கிணற்றை கிராம மக்கள் துõர் எடுத்தனர். அப்போது, அதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அத்தி வரதராஜபெருமாள் மற்றும் விஸ்வக்சேனர் ஆகிய கற்சிலைகளை கண்டெடுக்கப்பட்டன.  இவ்வாறு தெய்வ சிலைகள் கண்டெடுக்கபட்ட சம்பவம் அப்பகுதி மக்களை பரவசத்தில் ஆழ்த்தியது. சிலைகளை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து, சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தையது என கூறினர்.இதனிடையே கிராம மக்கள் ஒன்று கூடி, அச்சிலைகளை கொண்டு கோயில் கட்ட முடிவெடுத்தனர். அதன்படி, அத்தியூரில் பெருமாள் கோவில் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த 2012, பிப்ரவரி மாதம் சம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்) நடந்து முடிந்தது. தற்போது பெருமாள், கிராம மக்களுக்கு இறையருள் வழங்கி அருள் பாலித்து வருகிறார்.  பெருமாள் கோயில் அமைந்ததை தொடர்ந்து, அத்தியூர் கிராமத்தை  சேர்ந்த சிவ பக்தர் பெருமாள் என்பவரின் கனவில், சிவபெருமான் வயோதிகர் வடிவில் தோன்றி, சிவாலயம் கட்டும்படி உத்தரவிட்டார். இதனை அத்தியூர் மக்கள் ஏற்று, அப்பகுதியில் சிவாலயம் அமைக்க தீர்மானித்தனர். அதனை தொடர்ந்து, கைலாசநாதர் கோயில் புதைந்திருந்த இடத்தில்  ஆவுடையுடன் கூடிய  லிங்கம் மற்றும் அம்பாள், நந்தி பகவான்,  ஸ்ரீபீடம் ஆகியவற்றை பிரதிஷ்டை செய்து, சிவாலயம் கட்டும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த திருப்பணியில் பக்தர்களும் பங்கெடுத்து புண்ணியம் பெறலாம்.

இருப்பிடம்: காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் 22 கி.மீ., இங்கிருந்து தெற்கே, 12 கி.மீ., துõரத்தில் அத்தியூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !