உத்தமர் கோவிலில் பரிகார பூஜை!
ADDED :4101 days ago
மண்ணச்சநல்லூர்: திருச்சி அருகேயுள்ள உத்தமர் கோவிலில், சனிப்பெயர்ச்சி பரிகார பூஜைகள் நடந்தது. சனிபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்ததையொட்டி, திருச்சி அருகே உள்ள உத்தமர்கோவிலில் மேஷம், ரிஷபம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு உள்ளிட்ட ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொண்டனர். நேற்று காலை, 10.30 மணிக்கு, கோவிலில் மகா கணபதி பூஜை, மகா சங்கல்பம், புண்ணியாக வஜனம், 108 திரவியங்களால் ஹோமம் செய்யப்பட்டது. மதியம் 1.45 மணிக்கு சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், மஹா தீபாராதனையுடன் பரிகார அர்ச்சனை துவக்கப்பட்டது. சனிபகவான் வெள்ளி கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிந்தார். விழா ஏற்பாடுகளை, கோயில் நிர்வாக அதிகாரி சந்திரசேகரன், காசாளர் சாய்குமார் மற்றும் பணியாளர்கள் செய்தனர்.