உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூர் மன்னீஸ்வரர் கோவில்தேர்த்திருவிழா 25ல் துவக்கம்!

அன்னூர் மன்னீஸ்வரர் கோவில்தேர்த்திருவிழா 25ல் துவக்கம்!

அன்னுார்:அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா, 25ம் தேதி துவங்குகிறது. மேற்றலை தஞ்சாவூர் என்றழைக்கப்படும் அன்னுார் மன்னீஸ்வரர் கோவில், 1,000 ஆண்டு பழமைவாய்ந்தது. இக்கோவில் மகான்கள் வழிபட்டு, மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட பெருமையுடையது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் தேரோட்டம் நடக்கிறது. இந்த ஆண்டு தேர்த்திருவிழா, 25ம் தேதி கிராம தேவதை வழிபாடுடன் துவங்குகிறது. கணபதி வேள்வி மற்றும் கொடியேற்றம் 26ம் தேதி காலையில் நடக்கிறது. மாலையில், யாகசாலை பூஜை துவங்குகிறது. 27ம் தேதி காலை, சுவாமி சூரிய வாகனத்திலும், மாலை, சந்திர வாகனத்திலும் உலா வருகிறார்.

வரும், 28ம் தேதி மாலை 6.30 மணிக்கு பூத வாகனத்திலும், 29ம் தேதி மாலை புஷ்ப பல்லக்கிலும் சுவாமி உலா நடக்கிறது. 30ம் தேதி மாலையில் விநாயகர், அம்மன், சந்திரசேகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் உலா வருகின்றனர். 31ம் தேதி காலையில் திருக்கல்யாண உற்சவமும், மாலையில், யானை வாகனத்தில் சுவாமி திருவீதியுலாவும் நடக்கிறது. ஜன.,1ம் தேதி காலை 7.30 மணிக்கு, சுவாமி தேருக்கு எழுந்தருளுகிறார். காலை 11.00 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகள், இளைய பட்டம் மருதாசல அடிகள், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சாமிகள், கூனம்பட்டி ஆதீனம் ராஜசரவண மாணிக்கவாசக சாமிகள் உள்ளிட்ட மடாதிபதிகள் வடம் பிடித்து துவக்கி வைக்கின்றனர்.ஏற்பாடுகளை, திருமுருகன் அருள்நெறிக் கழகத்தினரும், பொதுமக்களும் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !