மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்!
ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், பக்தர்கள், குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா, கடந்த மாதம் 20ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. காலை, 8:30 மணிக்கு அருளாளி மனோகரன், மலர் பந்தை குண்டத்தில் உருட்டி விட்டு, முதலில் இறங்கினார். பின்னர் காப்புக்கயிறு கட்டி, விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி, சித்திரைத்தேரில் எழுந்தருளிய அம்மனை வழிபட்டனர்.
குண்டம் இறங்கியவர்களுக்கு, அம்மன் காப்பு சாத்தப்பட்டு, வெண்ணை வழங்கப்பட்டது. பெண்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்படவில்லை. ஆண்கள் குண்டம் இறங்கி முடித்ததும், விரதமிருந்த பெண்கள் பூச்சொறிதல் எனப்படும், குண்டத்திலிருந்த பூவை கைகளில் அள்ளி வீசி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களின் மாசாணி தாயே என்ற கோஷம், அப்பகுதியை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.