நாமக்கல் நரசிம்மர் ஸ்வாமி கோவில் தேர்த்திருவிழா: மார்ச் 27ல் துவக்கம்!
நாமக்கல் : நாமக்கல் நரசிம்மர் ஸ்வாமி கோவில் திருத்தேர் பெருவிழா, மார்ச் 27ம் தேதி கொடியேற்றுத்துடன் கோலாகலமாக துவங்குகிறது. நாமக்கல் நகரில், பிரசித்தி பெற்ற நரசிம்ம ஸ்வாமி கோவில் உள்ளது. இத்திருத்தலத்தில் புராண வரலாற்றுப்படி அனுமனால் கொண்டு வரப்பட்ட சாளக்கிராமம், மலைவடிவில் நகரின் நடுவே உள்ளது. மலையின் இருபுறமும் பாறையில் குடையப்பெற்ற இரு குகைக் கோவில்களில் நாமகிரித்தாயாரோடு நரசிம்மரும், அரங்கநாயகியரோடு கூடிய அரங்கநாதரும் கலை நயம்மிக்க பல்வேறு உருவ சிற்பங்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
குகை கோவில்களின் காலம், கி.பி., எட்டாம் நூற்றாண்டு. நரசிம்மர் கோவில் முன்புறம், 18 அடி உயரத்தில், ஆஞ்சநேயர் ஸ்வாமி எழுந்தருளி உள்ளார். இவ்வளவு சிறப்பு மிக்க இக்கோவிலுக்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து ஸ்வாமியை வழிபட்டுச் செல்கின்றனர். இக்கோவிலில் ஆண்டு தோறும் தேர் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா, மார்ச் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மார்ச் 28ம் தேதி முதல், ஏப்ரல் 3ம் தேதி வரை காலை, 10 மணிக்கு திருமஞ்சனம், பல்லக்கு புறப்பாடு, ஸ்நபன திருமஞ்சனம், இரவு, 7 மணிக்கு, அன்னம், சிம்மம், அனுமந்தன், கருடன், சேஷ, யானை, குதிரை வாகனம் மற்றும் மின் அலங்காரத்தில் ஸ்வாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். ஏப்ரல் 2ம் தேதி, மாலை, 6 மணிக்கு, திருமாங்கல்யதாரணம், மாங்கல்ய பொட்டு அளித்தல், பட்டு அங்கவஸ்திரம் அளித்தல், மணவறை அலங்காரம் நடக்கிறது. அதில், இறைவனுக்கு மொய் பணம் சமர்ப்பிப்பது மிக சிறப்பாகும். அதை தொடர்ந்து, ஏப்ரல் 4ம் தேதி காலை, 8 மணிக்கு, பேட்டை ரங்கநாதர், ஆஞ்சநேயர் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.தொடர்ந்து, ஏப்ரல் 5ம் தேதி முதல், 10ம் தேதி வரை காலை, 10 மணிக்கு திருமஞ்சனம், ஸ்நபன திருமஞ்சனம், பல்லக்கு புறப்பாடு, திருவீதி உலா, ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஹிந்து அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் கிருஷ்ணன், சபர்மதி மற்றும் ஊர் மக்கள் செய்துள்ளனர்.