திருப்பரங்குன்றத்தில் நான்கு ஏர் பூட்டுதல் விழா
திருப்பரங்குன்றம் : தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் மக்கள் சார்பில் கோயில் நிலத்தில் நான்கு ஏர் பூட்டி உழும் நிகழ்ச்சி நடந்தது. கோயிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவசம், கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாளுக்கு வெள்ளி கவசம் சாத்துப்படியாகி அருள்பாலித்தனர். சிறப்பு பூஜைகள் முடிந்து அன்னதானம், தங்க ரதஉலா, திருவிளக்கு பூஜை, ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. விவசாயிகள் நேற்று காலை குழந்தைகளுடன் புதிய தார் குச்சி நுனியில் பூச்சுற்றி கோயிலில் தரிசனம் முடித்து, மலையை சுற்றிவந்து நான்கு ஏர்களில் மாடுகள் பூட்டி தென்பரங்குன்றம் கோயில் நிலங்களை உழுதனர். கல்வெட்டு குகை கோயில் முன்பு கிராமத்தினர், ஏழு குளம் பாசன விவசாயிகள் கூட்டம் நடத்தி, திருவிழா கொண்டாட்டம், விவசாயம் குறித்தும், தொழில்களுக்கான கூலி நிர்ணயம் செய்தும் ஆலோசனை நடத்தினர். விவசாயம் செழிக்கவும் மக்கள் நலம் பெற வேண்டி இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கோயில் திருவாட்சி மண்டபத்தில் இரவு, பக்தர்கள் முன்னிலையில் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.